Sunday 29 November 2009

நானொரு பைத்தியம்!

நானொரு பைத்தியம்
எனக்கு நானே வைத்தியன்
ஓட்டுப்போட போன போது
நோட்டு வாங்கலை

சீட்டு போட்டு பணத்தை கேட்டேன்
பணமும் கெடைக்கலை
நாட்டுக்காக பேசிப்பாத்தேன்
கூட்டம் கூடலை

வீட்டுக்குள்ளே முடங்கிப்போயி
இருக்க முடியலை
பூட்டுப் போட்டேன் என் மனசை
திறக்க முடியலை

கூட்டிலிட்ட குயிலைப்போல
கூவ முடியலை
ஏட்டிலிட எழுத்தைக்கூட
எழுத முடியலை

ஏனிந்த நிலைமையென்று
எனக்கும் புரியலை
எப்போது விடியுமென்று
எதுவும் தெரியலை

நானொரு பைத்தியம்
எனக்கு நானே வைத்தியன்

Monday 17 August 2009

குரங்கு குடும்பத்திலும்...

அடர்ந்த காடு , அருவிகளின் சலசலப்பு . பல வகை கனிகளின் மணம் காற்றில் மிதக்கிறது . குரங்கு மரத்துக்கு மரம் தாவி பழங்களை ருசித்து ருசித்து கீழே எறிந்தது . குட்டிக்குரங்குகள் எடுத்து கடித்து சுவைத்தது .

ஏங்க…போதும் கீழே இறங்குங்க.

கொஞ்சம் இரு இந்தப்பழம் புதுசா இருக்கு பறிச்சு பாப்போம்.

சொன்னா கேளுங்க…கீழே விழுந்துறப்போறீங்க.

எப்பப் பாத்தாலும் ஒம் பக்கத்துலேயே இருக்கணும்னு நினைக்கீறீயா?

நான் சொல்றதைக் கேளுங்க …உங்களுக்கு மறதி வேறே ஜாஸ்தி கொப்பை புடிக்க மறந்துட்டீங்கன்னா அவ்வளவுதான்…

நம்ம…இந்த காடு பாத்தீயா…எவ்வளவு அழகா செழிப்பா…எல்லா வகையான பழங்களையும் உண்டு மகிழ வசதியா இருக்கு .

ஆமாங்க…சூப்பரா இருக்கு …என்று பெண் குரங்கு கழுத்தை கட்டிக் கொண்டது.

எங்க அம்மாவையும் கூட்டி வரணும். சொன்னது

நம்ம கூடவா…கழுத்திலிருந்து கையை விடுவித்தது.

ஆமா…அவங்க …இந்த மாதிரி காட்லல்லாம் அனுபவிச்சது கிடையாது.


என்ன பேசுற நீ…அவங்க அங்கே ஜாலியாத்தானே இருக்காங்க . வேணும்னா ஒரு வாரம் வந்து இருந்துட்டு போகட்டும். அவுங்க சொல்றதுக்கெல்லாம் எனக்கு ஆமாச்சாமி போட முடியாது.

ஆமாச்சாமி எதுக்கு போடுற முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே !

முடியாதுன்னு சொன்னா வருத்தப் படுவாங்க சண்டை வரும். ஒரு வாரத்துக்குன்னா சமாளிச்சுருவேன்.

சரி உன் விருப்பம் ஒரு வாரத்துக்கே கூப்பிடலாம்.

அப்பா…அந்த மரத்துல ஏறுறேன்னு பல்டி அடிச்சு பாறையில விழுந்துட்டாம்ப்பா…

ஏன்டா…குட்டி அடிகிடி படலையே… தலையை தடவி விட்டது குரங்கு.

இவன் சைடுல தாண்டுறேன்னு சொல்லி மரத்துக்கு இடையில போயி மாட்டிக்கிட்டாம்ப்பா…

பாத்துடா…பாத்து விளையாடுங்க புது இடம் என்ன இருக்கு ஏது இருக்குன்னு தெரியாது.

ஏங்கூடயே ஒட்டிக்கிட்டு இருக்கீயே …பிள்ளைக விளையாடும் போது பக்கத்துல போயி நின்னா என்னா.

அந்த நவ்வா மரத்துக்குரங்கப்பாரு எப்ப பாத்தாலும் பிள்ளையெ தூக்கிட்டே திரியுது.

ஆமா…அவ ஒருத்தி…அது ஒங்க கண்ணை உறுத்திருச்சா…பக்கத்து காட்டுல இருந்து அவ மாமியா வந்திருக்கு குட்டி கூட விளையாடிரும்னு தூக்கிட்டே திரியுது .அது போனதுக்கப்புறம் பாருங்க குட்டி பாட்டுல விளையாடிகிட்டு திரியும்.

நீயும் அப்படித்தான் பண்ணுவியா?

இதுக தூக்கி திரியுற மாதிரியா இருக்குக. ஒவ்வொன்னும் எரும மாடாட்டம் இருக்கு.

காலைல கருவமரத்தடி குரங்கு பாறையடிக்கு போகும், அப்ப சொல்லிவிடுவோம் அம்மாவெ வரச்சொல்லி.

நீயே போயி கூட்டி வந்துற வேண்டியது தானே!

கால்ல கட்டெறும்பு கடிச்சது இன்னும் வலிக்குது.

மஞ்சனத்து புதருக்குள்ளே மறைச்சு வச்சு மாம்பழத்துல ரெண்டு அம்மாவுக்கு கொடுத்து விடு.

இங்க வந்து திங்கட்டுமே என்ன அவசரம் ஆத்தா புத்தி அப்படியே இருக்கு . ஒன்னு இருக்கு கூடாது, உடனே காலி பண்ணீரனும். ஆங்கே இருந்து என்ன கொண்டு வராக பாக்கலாம்.

சரி..சரி…விடு

அது.

சூரியன் மெல்ல மெல்ல மலை முகடுகளினூடே மறைய தொடங்கினான். வானவெளியில் வண்ணக்கதிர்கள் காலைபபரப்பி இளைப்பாறிக்கொண்டிருந்தது.

அப்பாடி பாறையடில இருந்து வர்றதுக்குள்ளே படாது பாடு பட்டு போனேன்.மொபைல் போனுக்கு டவர் வக்கிறாங்களாம். சுத்திசுத்தி வரவேண்டியதாப்போச்சு.

எங்கே ஒம் பொண்டாட்டி…

விளையாடுற குட்டிகளை கூப்பிடப்போயிருக்கிறா…இந்தா…வந்துட்டா…

வாங்கத்தை…

நல்லாருக்கியா…

இருக்கேன்…

வாங்கடா கண்ணுகுட்டிகளா…

குரங்கு குட்டிகளான்னு கூப்பிடுங்க அப்பத்தா…அதான் எங்களக்கு புடிக்கும்.

அப்பத்தா அழைக்க ,அம்மா குட்டிகளை இறுக்கிப்பிடித்துக்கொண்டாள். குட்டி அழத்தொடங்கியது.

யாருகிட்டேயும் போகமாட்டான் அம்மா குரங்கு சிரிச்சுக்கிட்டே சொன்னது.

போகப்போகப் சரியாயிரும்…மகன் குரங்கு சொன்னது.

அதுக்குள்ளே எனக்கு வயசாயிரும்.

குட்டிகளை இழுத்துக்கொண்டு உச்சிமரக்கிளையில் போய் உட்கார்ந்து கொண்டது .

அம்மா நீங்களும் போங்கம்மா…

என்னால அவ்வளவு தூரம் ஏற முடியாதுப்பா…உன்னால முடிஞ்சா ஒரு அதட்டுப்போட்டு கீழே இறங்கி வரச் சொல்லு .

ஏம்மா என்ன வயசாயிருச்சு …அவ்வளவு தூரத்துல இருந்து நடந்து வந்திருக்கீங்க , இந்தா இருக்க உச்சி கொப்புக்கு ஏற முடியலையா?
என்னம்மா பேசுறீங்க.

தலை சுத்துதுடா…மரத்து மேலலாம் முன்ன மாதிரி ஏற முடியலை.

நல்ல மரங்களும் பழங்களும் நிறைய இருக்கே போகும் போது தம்பிகளுக்கு கொஞ்ச பழம் கொடுத்து அனுப்பு …பாவம் அவங்கெ பொறிகளைப் பொறுக்கி சாப்பிட்டுக்கிட்டு திரியுறாங்கே.

சரிம்மா போகும் போது சொல்லுங்க . ஏன் உங்க மருமகளை கூட்டிப்போங்க அவளுக்குத்தான் எல்லா டேஸ்ட்டும் தெரியும் .

பொண்டாட்டியெ ஒரேதா புகழாதேடா…நாங்களும் முப்பது வருசத்துக்கு முன்னாடி இந்த மாதிரி விதவிதமான பழங்கள்லாம் சாப்பிட்டவங்கதான்.நீ சின்னகுட்டியா இருக்கும் போது விதவிதமான பழங்களை காடுமேடெல்லாம் அலைஞ்சு பறித்து உனக்கு தருவோம். எல்லாத்தையும் மறந்துட்டே போல இருக்கு.

உன்னால தானே அவளுக்கு எல்லா ருசியும் தெரியுது. அதெ என்னைக்காவது அவளோ நீயோ நெனைச்சுப்பாத்தீங்களா . வேண்டாம்ப்பா…எங்களுக்கு பழமே வேண்டாம். நீ கொடுக்கிறதுன்னா கொடு , இல்லைன்னா வேண்டாம் . அதென்னா எல்லாம் பொண்டாட்டி கையால செய்யுறே .

எனக்கு கால்ல கட்டெறும்பு கடிச்சு புன்னாகியிருக்கு அதனால தான் எல்லாம் அவளா பாத்துக்கிறா.

அந்த புளியடி குரங்கைப் பாத்தீயா கால்ல காட்டருமை மிதிச்சும் அவன் கல்லு மாதிரி திரியுறான் . பொண்டாட்டி நில்லுன்னா நிக்கிறா…உக்காருன்னா உக்காருறா…நீ கடடெரும்பு கடிச்சுருச்சுன்னு சொல்லி எல்லாத்தையும் பொண்டாட்டிகிட்டெ கொடுத்துட்டே… டேய் அவ நம்ம குடும்பத்துக்கு வந்தவ தானே கொஞ்சமாவது குடும்பத்தோட ஒட்டுறாளா பாரு. அவ நீ மட்டும் தான் சொந்தமுன்னு நினைக்கிறா. எப்படி பந்த பாசம் வளரும்?

மேல் கொப்பிலிருந்து மெதுவாக இறங்கி வந்தது. ரெண்டு குட்டியும் நல்லா தூங்கிட்டாங்க.

அம்மாவுக்கு சாப்பிட என்ன இருக்கு ?

நவ்வாப்பழம் வச்சிருக்கேன்…

நவ்வாப்பழமா! எனக்கு வேண்டாம் …சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு தேஞ்சு போச்சு.

மாம்பழம் இருக்குல்ல இதெ எடுத்து அம்மாவுக்கு கொடு.

இதுக்குத்தான் எல்லாத்தையும் மறைச்சு வைக்கிறது . முனகிக்கொண்டே சென்றது.

சரிம்மா…நாளைக்கு பாறையடிக்கு காலைல புறப்பட்டாத்தான் சீக்கிரம் போய்ச் சேர முடியும்
அதனால நீயும் ஏம் பொண்டாட்டியும் மரங்களை சுத்திப்பாத்துட்டு அப்படியே நல்ல பழங்களையெல்லாம் பறிச்சுட்டு வந்திருங்க. இப்ப போனாத்தான் மத்த குரங்குகளெல்லாம் வர மாட்டாங்க. எல்லோரும் தூங்கிருப்பாங்கெ நல்ல பழங்கள் கிடைக்கும்.

சரிடா…ஒம் பொண்டாட்டிட்டெ சொல்லு.

ரெண்டு குரங்கும் கிளம்பிச் சென்றது. மரங்களுக்கிடையே சுற்றி திரிந்தது.

ஏம்மா…இது நல்லாருக்குமா?

நல்லாருக்காதுத்தை

இது நல்லாருக்குமாத்தை?

இது பாறையடியிலேயே கெடைக்கிது.

இது எப்படிம்மா இருக்கும்?

அதுல வெறும் கொட்டைதான்த்தை இருக்கும்.

இதெப்பாருங்க இனிப்பா வெறும் சாறா இருக்கும்.

வேண்டாம்மா எதோ கடிச்சிருக்கு.

இந்தப்பழம் நல்லா இருக்க மாதிரி இருக்கே

இல்லத்தை இது புளிக்கும்

சரி ஏதாவது நல்லதா பறிச்சுக்கொடு நேரம் வேறே ஆகிக்கிட்டு இருக்கு

அப்படி வாங்க வழிக்கு …மனதுக்குள் நினைத்துக்கொண்டது.

அங்Nயும் இங்கேயுமா தாவி தாவி கொஞ்சம் பழங்களை பறித்தது

வாங்கத்தை போகலாம்.

சரி வா போகலாம்.

பழம் பறிச்சாச்சுப்பா…பாரு

சூப்பரா இருக்குமா …நல்ல பழங்களா பறிச்சுருக்கா …இதுக்குத்தான் அவளை கூட்டிப் போகச் சொன்னேன்.

சரிம்மா அந்த புதருக்குள்ளே போயி தூங்கு…

அம்மா குரங்கு புதருக்குள்ளே சென்று படுத்தது. புதருக்குள்ளே ஒரே பழவாடை. தேடிப்பார்த்தது
செடிகளுக்கு மறைவில பழக்குமியல். அத்தனையும் பழம் பறிக்க போகும் போது நல்லா இருக்காதுன்னு சொன்ன பழங்கள் . வீட்டுக்கு கொண்டு போக வச்சிருக்கா போல இருக்கு .
இந்த மாதிரி விசயங்கள்ல்லாம் என்னைக்கு ஏங் குட்டிக்கு தெரிய வருதோ அன்னைக்குத்தான் அவனுக்கு புத்தி வரும். கண்ணாடி மாதிரி மனசு இருக்கிற ஏங் குட்டிக்கு இப்படி பொண்டாட்டி வாச்சிருக்கே. எத்தனை நாளைக்கு நாடகமாடுதுன்னு பாப்போம். நல்ல பழம் நல்ல பழம் ன்னு சொல்லி ஒண்ணுக்கும் ஆகாததை பறிச்சு கொடுத்திருக்கா… இதெ எடுத்துட்டு போக கூடாது. இங்கேயே விட்டுட்டு போயிடனும். யோசித்துக்கொண்டே தூங்கிப்போனாள்.

Friday 14 August 2009

சும்மாவா கிடைத்தது சுதந்திரம்-நாம்
சுகமாய் வாழ ஒரு மந்திரம்
வந்தேமாதரம்…


சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

Sunday 31 May 2009

அம்மாவா…மாமியாவா…

காஞ்சனாவுக்கு கண்ணைக்கட்டி காட்டுல விட்டது போலிருந்தது இவ்வளவு பேரு இருந்தும் நமக்கு உதவிக்கு ஆளு இல்ல , என்ன செய்யுறது. காஞ்னாவுக்கு அப்படியொரு நெனப்பு. அவரவர் வேலையெ, அவரவர் செய்தாதான் நல்லது. எந்த நாயையும் எதிர் பார்க்க கூடாது என்று அடிக்கடி சொல்வாள். இது அவளின் உச்சக்கட்ட வெறுப்பின் வெளிப்பாடு.

நாகர்கோவில் பஸ்ஸிற்காக மாட்டுத்தாவணியில் வெகு நேரமாக காத்திருந்தாள் . பஸ் நேரத்துக்கு வராததும் ஒருவகையில் அவள் வெறுப்புக்கு காரணம் . சென்னை டு நாகர்கோவில் பஸ் வந்து நின்றது.

காஞ்சனா பஸ்ஸின் படியில் காலடி வைத்தாள்.

எங்கம்மா போகனும்… கண்டக்டர் கேட்டார்.

நாகர்கோவில்

போம்மா போயி மூணாவது சீட்ல உக்காரு.

இந்த கண்டக்டருக்கு மரியாதையா கூட பேசத் தெரியலை.
மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் அவனிடம் அதற்காக சண்டை போடும் நிலைமையில் இல்லை. என்ன இவங்கிட்ட கடனா வாங்கிருக்கோம் …நீ…நான்னு மரியாதை இல்லாம பேசுறான். மரியாதை தெரியாத பயலுக்கெல்லாம் கவர்மென்டு உத்தியோகம். இருக்கையில் அமர்ந்தபடியே சன்னல் கதவை சற்று தள்ளினாள். குளிர்ந்த காற்று வெதும்பிய மனதுக்கு சற்று இதமாக இருந்தது.

நீ …எங்கம்மா போகனும்…
ஏய்யா …மொதல்ல மரியாதையா பேச கத்துக்கோ .

நாகர்கோவில்.

ரைட் போகலாம்…மூணாவது சீட்ல போயி அந்த அம்மா கூட உக்காரு.

இவங்களுக்கு என்னத்தை சொன்னாலும் மரியாதை கொடுத்து பேச தெரியாது.

கோபத்தில் கதவை இழுத்து சாத்தினார் கண்டக்டர். சட்டையில் கீழே இரண்டு பித்தான் மட்டும் மாட்டப் பட்டிருந்தது . உள்ளே அழுக்கு பனியன் தெரிந்தது.

டிக்கெட்…டிக்கெட்

காஞ்சனாவுக்கும் சகுந்தலாவுக்கும் டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு டிரைவர் அருகில் போய் அமர்ந்தார்.

எங்கம்மா போறீக காஞ்சனா கேட்டாள்.

நாகர்கோவில்

நீங்க?

நானும் நாகர்கோவில்தான்.

மதுரையிலதான் ஏறுனீங்களா…

ஆமா…

சொந்த ஊரே மதுரையா?

ஆமா…

நீங்க …காஞ்சனா கேட்டாள்.

நானும் மதுரை தான் . மகன் வீட்டுக்கு போறேன் . மகன் வீட்டுக்கு போறேன்னு சொல்றதை விட மகனைப் பாக்க போறேன். அவந்தான் வந்து என்னை வீட்டுக்கு கூட்டி போகனும்.

ஏம்மா…இதுவரை வீட்டுக்கு போனதே இல்லையா?

அதை ஏம்மா கேக்குறீங்க . பெத்த மனசு பத்தி எரியுது. முப்பது வருசம் படிக்க வச்சு… பாடவச்சு…அவனை வளத்து ஆளாக்க, எவளோ ஒருத்தியை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். அவங்கெ ப்ரெண்டு சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இதுக்கா இவங்களெ இப்படி பாத்து பாத்து வளத்தோம்.

காஞ்சனா தன் வீட்டு கதையை சொல்ல வேண்டுமென்று நினைத்து வார்த்தை வாய் வரை வந்து விட்டது அடக்கிக் கொண்டாள்.

இவன் ஒருத்தன் தாம்மா ஆரம்பத்துல இருந்து சொன்னபடி கேக்கமாட்டான். ஆரம்பத்துலேயே கண்டிச்சுருக்கனும் எங்களாலே முடியாமப் போச்சு . நாங்க இப்ப ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்குது . ஊரு உலகத்துல பிள்ளைக அம்மா அப்பாவோட எவ்வளவு அன்பா இருக்கிறாங்க …அதையெல்லாம் பாக்கும் போது பொறாமையா இருக்கு . அவன் கல்யாணத்தை எப்படியெல்லாம் பாக்கனும்னு எவ்வளவு ஆசை எங்களுக்கு இருந்திருக்கும். எல்லாம் தவிடு பொடியாச்சு.

பஸ்ஸை கோவில்பட்டி பைபாசில் காலை உணவுக்காக நிறுத்தினர்.

காஞ்சனா கொண்டு வந்திருந்த இட்லியில் இரண்டை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்தாள் .

வேண்டாம்மா…காலையில எப்பவுமே நான் சாப்பிடுவது இல்லை. நீங்க சாப்பிடுங்க.

பயணம் செய்யும் போது வெறும் வயித்தோட இருக்க கூடாது . ரெண்டு சாப்பிடுங்க .

வேண்டாம்மா…எனக்கு ஒன்னும் செய்யாது.

பயப்படாதீங்க…முன்னப்பின்னே தெரியாதவங்ககிட்ட எப்படி சாப்பிடுறதுன்னு நினைக்காதீங்க.

அதுக்கில்லம்மா…எனக்கு வேண்டாம்…

சாப்பிட்டு முடித்து பவண்டோ பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தாள்.

டிரைவர் வண்டியில் ஏறி கதவை இழுத்து சாத்தினார். பஸ்ஸை ஸ்டார்ட் செய்தார். ஆங்காங்கே நின்றிருந்த பயணிகள் ஓடி வந்து ஏறிக் கொண்டனர். பஸ் பைபாஸ் ரோட்டில் ஏறி வேகமெடுத்தது.

நீங்க என்ன விசயமா நாகர்கோவில் போறீக. சொந்தக்காரக வீட்டுக்கா போறீக. சகுந்தலா கேட்டாள்.

இல்லம்மா…பொண்ணு அங்கே இருக்கா…பாக்கலாம்னு போறேன் .

இதுக்கு முன்னாடி போயிருக்கீகலா? எங்கே இருக்காக.

போயிருக்கேன் …ஆனா …இடமெல்லாம் தெரியாது . பஸ்டான்ட்ல இறங்கிட்டு போன் பண்ணுன்னா வந்து கூட்டிப் போயிருவாக.

நானும் அப்படித்தான் இறங்கினதும் போன் செய்யனும் . மகன் வந்து கூட்டிப் போவான் . மற்றபடி அவன் எங்கே இருக்கான் . என்ன செய்யுறான்னு எதுவும் தெரியாது . சொல்லவும் மாட்டான். புறப்படும் போது கூட போன் செய்தப்போ வர வேண்டாம்னுதான் சொன்னான். ஆசையா வாம்மான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்னுட்டான்.

அப்புறம் எதுக்கு போறீங்க . வரவேண்டாம்னு சொன்னதுக்கப்புறம் போறது சரியா?

சரியா தவறான்னு பெத்த பிள்ளைகிட்ட ஆராய்ச்சி பண்ண முடியுமா? அவன்தான் புரியாமப்பேசுறான்னா, நாம எப்படி சும்மா இருக்க முடியும். என்ன பண்றான் எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கிறது நம்ம கடமையில்லையா?

அதுவும் சரிதான்…

சொல்லிவிட்டு சன்னல் வழியாக பசுமையான இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தவாறு வந்தாள். காஞ்சனாவின் செல்போன் சினுங்கியது.

ஹலோ…சொல்லுப்பா

எங்கத்தை இருக்கீங்க…

திருநெல்வேலி தாண்டி வந்துக்கிட்டு இருக்கேன்.

அத்தை …நீங்க நாகர்கோவில் உள்ளே நுழைஞ்சவுடனே எனக்கு போன் செய்திருங்க. அப்ப நான் வர சரியா இருக்கும்.

சரிப்பா…நான் போன் பண்றேன்.

மருமகன்…பஸ்டான்டு வந்து கூட்டிப் போறேன்னு சொல்றார்.

சகுந்தலா தனது போனை எடுத்து மகனுக்கு தொடர்பு கொண்டாள் .

ஹலோ…நான்தாம்ப்பா…அம்மா பேசுறேன்…உன்னை பாக்க வந்து கொண்டிருக்கேன்டா…

ஏம்மா…நான்தான் சொன்னேன்ல வர வேண்டாம்னு எதுக்கு இப்ப வர்றே.

டேய் ஏம் மருமகளை பாக்கனும்டா…எனக்கு ஆசை இருக்காதா…சொல்லு . வீடு வாசல பாத்து இப்படி அப்படி இருக்கனும்னு பெரியவங்க சொன்னா தாண்டா சின்னப்பிள்ளைகளுக்கு தெரியும் அதுக்குதாண்டா நான் வர்றேன்னு சொல்றது.

இங்க பாரும்மா…நான் ரொம்ப பிஸியா இருப்பேன் . நீ கூப்பிட்ட உடனே வந்து கூட்டி போகலைன்னு என்னை குறை சொல்லக்கூடாது. சரி நாகர்கோயில் வந்துட்டு கூப்பிடு. போனை வச்சிரு. வேண்டா வெறுப்பாக பேசினான்.

பெத்த பிள்ளைக பாருங்க எப்படி இருக்குதுன்னு . சகுந்தலா நொந்து கொண்டாள். ஆரோக்கியமா இருக்கும் போதே இப்படி இருந்தாங்கன்னா வயசான காலத்துல என்ன செய்யக் காத்திருக்காங்களோ ! நெனச்சா பயமா இருக்கு.

ஆம்பளைப்பிள்ளைகளே இப்படித்தாம்மா…அதுகளை நம்ப முடியாது. அதான் வந்த மூணுமாசத்துலயே மாத்திப்புறாள்களே!.

நல்ல புள்ளைகளும் இருக்கத்தானேமா செய்யுதுக. நான் பெத்தபுள்ளே சரியில்ல . அவ்வளவு தான் நான் சொல்லமுடியும்.

பஸ் நாகர்கோவிலுக்குள் நுழைந்தது.

தம்பி…நான்…அம்மா…நாகர்கோவில் வந்துட்டேன்டா. சீக்கிரம் வந்துருப்பா… சரியா…எங்க நிக்க…

மணிக்கூண்டு பக்கத்துல நில்லு வச்சுரவா…

காஞ்சனா …போன் செய்தாள்…நான்தான் பேசுறேன் நாகர்கோவிலுக்கு வந்துட்டேன்.

அப்படியா அத்தை…ரொம்ப சீக்கிரமா வந்துட்டீங்க…பஸ் நிக்கிற இடத்துலேயே நில்லுங்க உடனே வந்துர்றேன்.

பஸ்டாண்டில் பஸ் வந்து நின்றது.

சரிம்மா…அப்ப… பாப்போம் போய்வர்றீகளா…காஞ்சனா சகுந்தலாக்கு விடை கொடுத்தாள்.

நீங்க…

மருமகன் இங்கயே நிக்க சொல்லிருக்கார்.

அப்ப சரிம்மா …நான் வர்றேன். ஏம்பிள்ளைதான் மணிக்கூண்டுக்கிட்ட வைட் பண்ண சொல்லிருக்கான். ஏப்ப வர்றானோ… முனகிக் கொண்டே நடையைக் கட்டினாள்.

மணிக்கூண்டுஅருகில் நின்று கொண்டு காஞ்சனாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பாவம் தெரியாத ஊருல வந்து இந்த அம்மா தனியா நின்னுக்கிட்டு இருக்கு . மருமகன் எப்ப வர்றானோ.

சிறிது நேரத்தில் காஞ்சனாவின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.

பரவாயில்லை…இந்தம்மா யோகக்காரிதான் சொன்ன மாதிரி மருமகன் உடனே வந்துட்டான்.சகுந்தலா மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

ஆட்டொவிலிருந்து இறங்கி காஞ்சனாவின் பையை வாங்கி ஆட்டோவில் வைத்து சற்று திரும்பினான்.

அட…நம்ம பய மாதிரி இருக்கு …அவளா இவ…

டேய்…டேய்…கதிரேசா…அய்யோ அவனைக் கூப்பிடுங்களேன். கூட்டத்தை பார்த்து கை காட்டினாள். டேய் கதிரேசா…கதிரேசா…கத்திக் கொண்டே ஓடினாள்.

ஆட்டோ சட்டென்று வேகமெடுத்தது…பின் மறைந்தது.

ஒரு மணி நேரம் …ரெண்டு மணி நேரம்…காலம் கடகடவென்று ஓடியது. கதிரேசனிடமிருந்து எந்த சலனமுமில்லை.

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்தாள். அவன் போனை எடுக்கவில்லை.

அடப்பாவி…நீயெல்லாம் ஒரு பிள்ளையா! பெத்த அம்மாவை கண்கலங்கவிடுறவன் எப்படி பொண்டாட்டியை வச்சு காலம் தள்ளப் போறே…கண்களில் கண்ணீர் கடலாய் நிற்க, தனது பையை தூக்கிக்கொண்டு வந்த பஸ்ஸிலேயே மீண்டும்காலடி எடுத்து வைத்தாள் சகுந்தலா.

இதையும் படிக்கவும்....

பெற்ற மனம்…


Saturday 16 May 2009

காட்டுராஜா…வழி காட்டுராஜா

குகைக்குள் தீப்பந்தம் எரிந்து கொண்டிருந்தது. சொந்த பந்தங்கள் என்று உருவாவதற்கு முன் தீப்பந்தங்கள் தான் மனிதனுக்கு துணை.

காட்டுராஜாவும் காட்டு ராணியும் அந்த குகையில் தனியாக இருந்தனர் . குகை வாயிலை யாரோ பிராண்டுவது போல சத்தம் .

சிங்கம்…ஒன்றும் செய்ய வேண்டாம் …தைரியமாக இரு…அதனால் குகை வாசலில் உள்ள கல்லை புரட்டி போட்டு விட்டு உள்ளே நுழைய முடியாது . நீ போய் தைரியமாக தூங்கு. காட்டு ராஜா சொன்னான்.

அதை கொன்று போட்டு விட்டால் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்கலாம் . என்ன சொல்கிறீர்கள்.

புரியாமல் பேசுகிறாய் . அந்த ஒரு சிங்கத்தை இப்போது கொன்றுவிட்டோமென்றால் ஒரு சிங்க கூட்டமே இங்கு வந்துவிடும் .பிறகு நம்மால் வெளியே செல்ல முடியாது . அத்தனை சிங்கங்களையும் நம்மால் சமாளிப்பது என்பது சிரமம்;

உள்ளே வந்து விட்டால் என்ன செய்வது

வருவதற்கு வாய்ப்பில்லை. வந்தால் பார்த்து கொள்வோம்.

சிங்கம் பசியோடு இருக்கும் போது தான் உணவுக்காக மற்ற மிருகங்களையும் மனிதர்களையும் தாக்கும் . பொதுவாக அது ஒரு சோம்பேறி மிருகம். பசி கூடுதலாகும் போது தானாக வேறு எங்காவது சென்று விடும் வேட்டையாடுவதற்கு . அதனால் ,தைரியமா நீ தூங்கலாம்.

இப்படியொரு வாழ்க்கைக்கு நாம் முடிவு கட்டவேண்டும். நாம் ஏன் மற்ற மனிதர்களையும் சேர்த்துக்கொண்டு கூட்டமாக வாழக்கூடாது.
கூட்டமாக வாழ்ந்தால் இந்த மிருகங்களிடமிருந்து தப்பிக்லாமே!

பாருங்கள் …இவையெல்லாம் மனிதர்களின் எழும்புக் கூடுகள் தான் . எத்தனை மனிதர்கள் கொடூர மிருகங்களால் தாக்கப் பட்டிருக்கிறார்கள் பாருங்கள். இது போன்ற காட்சிகள் எத்தனை குகைகளில். குழந்தையின் குரல்வளையை கவ்வி இழுத்துச் சென்ற சிறுத்தையிடமிருந்து அக்குழந்தையை அவன் தந்தையால் காப்பாற்ற முடிந்ததா? இல்லையே.

நல்ல யோசனை …நாளை ஒவ்வொரு குகையாக சென்று பேசிப்பார்ப்போம். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல. ஏனென்றால் குகையை நெருங்கும் போது பகையாளி வருகிறான் என்று வாளையும் கோடரியையும் உயர்த்தி பிடிப்பார்கள் . சில இடங்களில் யுத்தம் கூட செய்ய வேண்டி வரும் . இவற்றையெல்லாம் சமாளிக்க போதும் போதும் என்றாகி விடும்.

யுத்தம் செய்ய வேண்டியது வந்தாலும் பரவாயில்லை . தைரியமாக போரிட்டு அவர்களை தங்களது அடிமையாக்கிவிடுங்கள் . அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்டபார்கள் அல்லவா ?

நிச்சயமாக…கேட்டுத்தானே ஆக வேண்டும்.

சரி…நீ …போய் தூங்கு…

வேண்டாம் …நீங்கள் சொன்னது போல அந்த மிருகம் போய்விட்டால் அதன் பின் இருவரும் தூங்கலாம். நான் சொன்னதை உடனே செய்யுங்கள். நாமெல்லாரும் கூட்டமா வாழ்வோம். அப்போது தான் மிருகங்களிடமிருந்து தப்ப முடியும்.
பகலில் உறங்குவோர் இரவில் பாதுகாக்கலாம் . இரவில் உறங்குவோர் பகலில் பாதுகாக்கலாம்.

சிங்கத்தின் உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தில் கேட்டு பின் மறையத்தொடங்கியது.

பார்த்தாயா …சிங்கம் போய்விட்டது. அதற்கு பசி அதிகமாகிவிட்டது. இங்கு நின்றிருந்தால் எதுவும் கிடைக்காது என்று பொறுமையிழந்து போய்விட்டது. பொறுமை காத்த நமக்கு வெற்றி.

உனது ஆலோசனை எனக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. இது வரை யாருக்கும் இந்த ஆலோசனை வரவில்லை. வந்திருந்தால் நாம் தன்னந்தனியாக இந்த இருண்ட குகையில் அடைந்து கிடக்க தேவையில்லை. இப்போது உனது ஆலோசனைப் பற்றிய சிந்தனையால் எனக்கு முற்றிலுமாக தூக்கம் போய்விட்டது. எப்போது விடியும் என்று காத்திருக்கிறேன்.

பேசிக் கொண்டே இருவரும் அயர்ந்து தூங்கிவிடடனர். அதிகாலை மிருகங்களின் சத்தமும், பறவைகளின் ஒலியும் , அருவியின் சலசலப்பும் அவர்களின் தூக்கத்தை கலைத்தது . எழுந்து இருவரும் சேர்ந்து குகைவாயிலில் வைத்திருந்த கல்லை நகர்த்தினர். வெளியில் வந்து சுத்தமான காற்றை சுவாசித்தனர்.

மிருகங்களுக்கு மத்தியில் ஒரு நாள் ஒரு யுகம். இந்த நிலைமை மாற வேண்டும்.

அம்பை எடுத்து வில்லில் தொடுத்து குறி பார்த்து எய்தான் . கனி கொத்தாக விழுந்தது. ஆகா அற்புதமான காலை ஆகாரம் . கொடூர மிருகங்கள் மட்டும் இல்லையென்றால் வாழ்வதற்கு அற்புதமான பகுதி .

சரி சீக்கிரம் புறப்படுங்கள் . எல்லோரும் வேட்டைக்கு சென்று விடப் போகிறார்கள் . அப்புறம் யார் கூடப் போய் பேசுவது . குழந்தைகளும் பெண்களும் மட்டும்தான் குகையில் இருப்பார்கள் . அவர்களும் நம்மைக்கண்டு வெளியில் வர அஞ்சுவார்கள். அதனால் சீக்கிரம் போக வேண்டும் . காட்டுராணி அவசரப்படுத்தினாள்.

இதோ அவ்வளவு தான் புறப்பட்டுவிட்டேன்.

பக்கத்து குகையை நோக்கி சென்றனர் .

யார் குகையில?

யார் நீ! கேட்டவாறே . ஒரு வயதான மனிதன் எட்டிப்பார்த்தார்.

வேறு யாரும் இல்லையா?

எதுக்கு கேட்கிறாய் சொல்.

எதிர் காலம் பற்றி பேச …

எதிர் காலம் பற்றி பேசுவதற்கு நீ யார்

நான் காட்டுராஜா, இவள் என் மனைவி

உன்னை காட்டுராஜா என்று யார் அழைத்தது.

நானாக வைத்துக் கொண்ட பெயர்.

எதிர் காலத்துக்கு என்ன வந்தது.

எதிர் காலத்துக்கு ஒன்றும் வரவில்லை எதிர் காலத்தில் வாழப் போகும் சந்ததி பற்றி கவலை .

நான் இந்த குடும்பத்தலைவன் என்னிடம் சொல் …என்ன சொல்ல வந்தாய்.

வேறு இளைஞர்கள் …

நிறையவே இருக்கிறார்கள் . நான் சொன்னால் கேட்பார்கள்.

அப்படியானால் சரி …சொல்கிறேன்.

காட்டுராஜா திட்டத்தை சொன்னான் .

திட்டம் சரிதான் …அதற்கு நீ ஏன் தலைவனாக இருக்க வேண்டும் . நாங்கள் இங்கு முப்பதுக்கும் மேற்படடோர் இருக்கிறோமே !. எங்களில் ஒருவர் தலைவராக இருந்தால்…என்ன நான் கேட்பது சரிதானே.

முப்பது பேர் இருந்தும் நீங்கள் நிம்மதியாக தூங்குகிறீர்களா .

ஆமாம்…எங்களை நாங்களே பாது காத்துக் கொள்கிறோம் .

அப்படியென்றால் மற்றவர்களையும் சேர்த்துக்கொண்டு அரவனைத்து செல்லாதது ஏன்?

அது எங்களுக்கு தேவையில்லாதது. நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம்.

அப்படியா…

காட்டுராஜா…பேசிப்பயனில்லை…வாருங்கள் வேறு குகை நோக்கி செல்வோம் .

அதுவும் சரிதான்.

இருவரும் பக்கத்தில் உள்ள குகை நோக்கி சென்றனர்.

குகையில் யாரு ?

ஒரு பெண் எட்டிப்பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.

என்ன வேண்டும்? எங்கிருந்து வருகிறீர்கள்.

பக்கத்து குகையிலிருந்து . என் பெயர் காட்டுராஜா இவள் என் மனைவி .

சொல்லுங்கள்.

நாம் ஒவ்வொருவரும் தனித்தனியாக குகையில் பயந்து பயந்து வாழ்வதற்கு பதில் நாம் அனைவரும் கூட்டாக சேர்ந்து வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

நன்றாகத்தானிருக்கும். ஒவ்வொருவரையும் சேர்ப்பதற்கு போதும் போதும் என்றாகிவிடும் . அது தான் யோசிக்க வேண்டியது

அது புரிகிறது . நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் .

நல்ல யோசனை . நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்.

எங்களுடன் சேர்ந்தால் போதும் …உங்கள் பெயர் சொல்லுங்கள்.

வேங்கை வென்றான்…

நல்ல பெயர்…நீங்கள் மட்டும் தான் இருக்கிறீர்களா?

இல்லை…இங்கே பத்து பதினைந்து பேர் இருக்கிறார்கள்.

அவர்ளையும் கூப்பிடுங்கள்.

வேங்கை வென்றான் அழைக்க அனைவரும் வந்து சேர்ந்தனர் . அனைவரும் ஒருங்கினைந்து பக்கத்து குகைக்கு சென்று பேசி அவர்களையும் சேர்த்துக் கொண்டு ஆற்றங்கரை ஓரமாக சென்று இளைப்பாறினர். கிட்டத்தட்ட ஐநூறு பேருக்கு மேல் காட்டு ராஜாவின் திட்டத்தை அங்கீகரித்து சமுதாயமாக சேர்ந்து வாழத்தொடங்கினர்.

ஓற்றுமையின் உயர்வை எடுத்து சொல்ல காட்டிலும் மேட்டிலும் எங்கெல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்களோ அங்கெல்லாம் சென்றார்கள் . பெரிய சமுதாயம் உருவானது.

குடிசை அமைத்து குடும்பம் குடும்பமாக வாழத்தொடங்கினர். மிருகங்கள் மனிதனை நெருங்கப் பயந்தன. காட்டுராஜாவும் காட்டுராணியும் மனித வாழ்க்கையின் மாற்றத்தைப் பார்த்து மனம் நெகிழ்ந்தனர்.

ஒரு நாள் காட்டு ராஜா ஆற்றங்கரை ஓரமாக நடந்து வந்து கொண்டிருந்தான். சட்டென காலில் ஏதோ எடறியது .குனிந்து பார்த்தான் . அடடா…வேங்கை வென்றான்…என்ன ஆயிற்று , அவனின் உடலை திருப்பினான். முதுகில் ஈட்டி பாய்ந்திருந்தது.
மனிதன் அன்று மிருகமானான். இன்றும் தொடர்கிறது.

Tuesday 12 May 2009

வண்ணநிலவு ...

வானம் கொடுத்தது வண்ணநிலவு
வண்ணநிலவுக்கு என்ன கனவு
மேகத்திரைக்குள்ளே முகம் காட்டி
மெல்ல சிரிக்குது வண்ணநிலவு

கானம் இசைத்ததிந்த வண்ணநிலவு
காற்றில் பறக்குதிந்த வண்ணநிலவு
வெட்டவெளி பொட்டலிலே இருக்கிறாய்
வெள்ளை நிற முத்தாக நீ சிரிக்கிறாய்

கடலிலே கண்ணாடி பார்க்கிறாய்
அலைநெற்றியில் பொட்டாக மிதக்கிறாய்
சூரியனைக்கண்டாலே மறைகிறாய்
நாளுக்குநாள் ஏனோ நீயும் குறைகிறாய

வானம் கொடுத்தது வண்ணநிலவு
வண்ணநிலவுக்கு என்ன கனவு
மேகத்திரைக்குள்ளே முகம் காட்டி
மெல்ல சிரிக்குது வண்ணநிலவு

Tuesday 5 May 2009

பொருமையே பூஷணம் (குருமதிமாலை )

வெறுமைகள கன்றுன்னுள்ளம்
நறுமணங் கமழ்ந்திடப்
பொருமை யென்றபூஷணமணி---சாந்தியுலவி
மறுமையில் பயனுறுவாய் நீ.


கருத்துரை:-

நீ வெறுமைகளற்று , வேற்றுமை பாராட்டாது உனதுள்ளம் நறுமணம் வீசிப் பறந்து , மேலும் பொருமையை ஆபரணமாகப் பூண்டுகொள்வாயானால், இம்மைப்பயனோடு மறுமைப்பயனும் பெற்றின்புறுவாய்!

வறுமைகள் வரினும்
பொருமை குன்றாதே.