நாகர்கோவில் பஸ்ஸிற்காக மாட்டுத்தாவணியில் வெகு நேரமாக காத்திருந்தாள் . பஸ் நேரத்துக்கு வராததும் ஒருவகையில் அவள் வெறுப்புக்கு காரணம் . சென்னை டு நாகர்கோவில் பஸ் வந்து நின்றது.
காஞ்சனா பஸ்ஸின் படியில் காலடி வைத்தாள்.
எங்கம்மா போகனும்… கண்டக்டர் கேட்டார்.
நாகர்கோவில்
போம்மா போயி மூணாவது சீட்ல உக்காரு.
இந்த கண்டக்டருக்கு மரியாதையா கூட பேசத் தெரியலை.
மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் அவனிடம் அதற்காக சண்டை போடும் நிலைமையில் இல்லை. என்ன இவங்கிட்ட கடனா வாங்கிருக்கோம் …நீ…நான்னு மரியாதை இல்லாம பேசுறான். மரியாதை தெரியாத பயலுக்கெல்லாம் கவர்மென்டு உத்தியோகம். இருக்கையில் அமர்ந்தபடியே சன்னல் கதவை சற்று தள்ளினாள். குளிர்ந்த காற்று வெதும்பிய மனதுக்கு சற்று இதமாக இருந்தது.
நீ …எங்கம்மா போகனும்…
ஏய்யா …மொதல்ல மரியாதையா பேச கத்துக்கோ .
நாகர்கோவில்.
ரைட் போகலாம்…மூணாவது சீட்ல போயி அந்த அம்மா கூட உக்காரு.
இவங்களுக்கு என்னத்தை சொன்னாலும் மரியாதை கொடுத்து பேச தெரியாது.
கோபத்தில் கதவை இழுத்து சாத்தினார் கண்டக்டர். சட்டையில் கீழே இரண்டு பித்தான் மட்டும் மாட்டப் பட்டிருந்தது . உள்ளே அழுக்கு பனியன் தெரிந்தது.
டிக்கெட்…டிக்கெட்
காஞ்சனாவுக்கும் சகுந்தலாவுக்கும் டிக்கெட்டை கிழித்து கொடுத்துவிட்டு டிரைவர் அருகில் போய் அமர்ந்தார்.
எங்கம்மா போறீக காஞ்சனா கேட்டாள்.
நாகர்கோவில்
நீங்க?
நானும் நாகர்கோவில்தான்.
மதுரையிலதான் ஏறுனீங்களா…
ஆமா…
சொந்த ஊரே மதுரையா?
ஆமா…
நீங்க …காஞ்சனா கேட்டாள்.
நானும் மதுரை தான் . மகன் வீட்டுக்கு போறேன் . மகன் வீட்டுக்கு போறேன்னு சொல்றதை விட மகனைப் பாக்க போறேன். அவந்தான் வந்து என்னை வீட்டுக்கு கூட்டி போகனும்.
ஏம்மா…இதுவரை வீட்டுக்கு போனதே இல்லையா?
அதை ஏம்மா கேக்குறீங்க . பெத்த மனசு பத்தி எரியுது. முப்பது வருசம் படிக்க வச்சு… பாடவச்சு…அவனை வளத்து ஆளாக்க, எவளோ ஒருத்தியை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். அவங்கெ ப்ரெண்டு சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். இதுக்கா இவங்களெ இப்படி பாத்து பாத்து வளத்தோம்.
காஞ்சனா தன் வீட்டு கதையை சொல்ல வேண்டுமென்று நினைத்து வார்த்தை வாய் வரை வந்து விட்டது அடக்கிக் கொண்டாள்.
இவன் ஒருத்தன் தாம்மா ஆரம்பத்துல இருந்து சொன்னபடி கேக்கமாட்டான். ஆரம்பத்துலேயே கண்டிச்சுருக்கனும் எங்களாலே முடியாமப் போச்சு . நாங்க இப்ப ரொம்ப வருத்தப்பட வேண்டியிருக்குது . ஊரு உலகத்துல பிள்ளைக அம்மா அப்பாவோட எவ்வளவு அன்பா இருக்கிறாங்க …அதையெல்லாம் பாக்கும் போது பொறாமையா இருக்கு . அவன் கல்யாணத்தை எப்படியெல்லாம் பாக்கனும்னு எவ்வளவு ஆசை எங்களுக்கு இருந்திருக்கும். எல்லாம் தவிடு பொடியாச்சு.
பஸ்ஸை கோவில்பட்டி பைபாசில் காலை உணவுக்காக நிறுத்தினர்.
காஞ்சனா கொண்டு வந்திருந்த இட்லியில் இரண்டை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்தாள் .
வேண்டாம்மா…காலையில எப்பவுமே நான் சாப்பிடுவது இல்லை. நீங்க சாப்பிடுங்க.
பயணம் செய்யும் போது வெறும் வயித்தோட இருக்க கூடாது . ரெண்டு சாப்பிடுங்க .
வேண்டாம்மா…எனக்கு ஒன்னும் செய்யாது.
பயப்படாதீங்க…முன்னப்பின்னே தெரியாதவங்ககிட்ட எப்படி சாப்பிடுறதுன்னு நினைக்காதீங்க.
அதுக்கில்லம்மா…எனக்கு வேண்டாம்…
சாப்பிட்டு முடித்து பவண்டோ பாட்டிலை திறந்து கொஞ்சம் குடித்தாள்.
டிரைவர் வண்டியில் ஏறி கதவை இழுத்து சாத்தினார். பஸ்ஸை ஸ்டார்ட் செய்தார். ஆங்காங்கே நின்றிருந்த பயணிகள் ஓடி வந்து ஏறிக் கொண்டனர். பஸ் பைபாஸ் ரோட்டில் ஏறி வேகமெடுத்தது.
நீங்க என்ன விசயமா நாகர்கோவில் போறீக. சொந்தக்காரக வீட்டுக்கா போறீக. சகுந்தலா கேட்டாள்.
இல்லம்மா…பொண்ணு அங்கே இருக்கா…பாக்கலாம்னு போறேன் .
இதுக்கு முன்னாடி போயிருக்கீகலா? எங்கே இருக்காக.
போயிருக்கேன் …ஆனா …இடமெல்லாம் தெரியாது . பஸ்டான்ட்ல இறங்கிட்டு போன் பண்ணுன்னா வந்து கூட்டிப் போயிருவாக.
நானும் அப்படித்தான் இறங்கினதும் போன் செய்யனும் . மகன் வந்து கூட்டிப் போவான் . மற்றபடி அவன் எங்கே இருக்கான் . என்ன செய்யுறான்னு எதுவும் தெரியாது . சொல்லவும் மாட்டான். புறப்படும் போது கூட போன் செய்தப்போ வர வேண்டாம்னுதான் சொன்னான். ஆசையா வாம்மான்னு ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன்னுட்டான்.
அப்புறம் எதுக்கு போறீங்க . வரவேண்டாம்னு சொன்னதுக்கப்புறம் போறது சரியா?
சரியா தவறான்னு பெத்த பிள்ளைகிட்ட ஆராய்ச்சி பண்ண முடியுமா? அவன்தான் புரியாமப்பேசுறான்னா, நாம எப்படி சும்மா இருக்க முடியும். என்ன பண்றான் எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கிறது நம்ம கடமையில்லையா?
அதுவும் சரிதான்…
சொல்லிவிட்டு சன்னல் வழியாக பசுமையான இயற்கை காட்சிகளை பார்த்து ரசித்தவாறு வந்தாள். காஞ்சனாவின் செல்போன் சினுங்கியது.
ஹலோ…சொல்லுப்பா
எங்கத்தை இருக்கீங்க…
திருநெல்வேலி தாண்டி வந்துக்கிட்டு இருக்கேன்.
அத்தை …நீங்க நாகர்கோவில் உள்ளே நுழைஞ்சவுடனே எனக்கு போன் செய்திருங்க. அப்ப நான் வர சரியா இருக்கும்.
சரிப்பா…நான் போன் பண்றேன்.
மருமகன்…பஸ்டான்டு வந்து கூட்டிப் போறேன்னு சொல்றார்.
சகுந்தலா தனது போனை எடுத்து மகனுக்கு தொடர்பு கொண்டாள் .
ஹலோ…நான்தாம்ப்பா…அம்மா பேசுறேன்…உன்னை பாக்க வந்து கொண்டிருக்கேன்டா…
ஏம்மா…நான்தான் சொன்னேன்ல வர வேண்டாம்னு எதுக்கு இப்ப வர்றே.
டேய் ஏம் மருமகளை பாக்கனும்டா…எனக்கு ஆசை இருக்காதா…சொல்லு . வீடு வாசல பாத்து இப்படி அப்படி இருக்கனும்னு பெரியவங்க சொன்னா தாண்டா சின்னப்பிள்ளைகளுக்கு தெரியும் அதுக்குதாண்டா நான் வர்றேன்னு சொல்றது.
இங்க பாரும்மா…நான் ரொம்ப பிஸியா இருப்பேன் . நீ கூப்பிட்ட உடனே வந்து கூட்டி போகலைன்னு என்னை குறை சொல்லக்கூடாது. சரி நாகர்கோயில் வந்துட்டு கூப்பிடு. போனை வச்சிரு. வேண்டா வெறுப்பாக பேசினான்.
பெத்த பிள்ளைக பாருங்க எப்படி இருக்குதுன்னு . சகுந்தலா நொந்து கொண்டாள். ஆரோக்கியமா இருக்கும் போதே இப்படி இருந்தாங்கன்னா வயசான காலத்துல என்ன செய்யக் காத்திருக்காங்களோ ! நெனச்சா பயமா இருக்கு.
ஆம்பளைப்பிள்ளைகளே இப்படித்தாம்மா…அதுகளை நம்ப முடியாது. அதான் வந்த மூணுமாசத்துலயே மாத்திப்புறாள்களே!.
நல்ல புள்ளைகளும் இருக்கத்தானேமா செய்யுதுக. நான் பெத்தபுள்ளே சரியில்ல . அவ்வளவு தான் நான் சொல்லமுடியும்.
பஸ் நாகர்கோவிலுக்குள் நுழைந்தது.
தம்பி…நான்…அம்மா…நாகர்கோவில் வந்துட்டேன்டா. சீக்கிரம் வந்துருப்பா… சரியா…எங்க நிக்க…
மணிக்கூண்டு பக்கத்துல நில்லு வச்சுரவா…
காஞ்சனா …போன் செய்தாள்…நான்தான் பேசுறேன் நாகர்கோவிலுக்கு வந்துட்டேன்.
அப்படியா அத்தை…ரொம்ப சீக்கிரமா வந்துட்டீங்க…பஸ் நிக்கிற இடத்துலேயே நில்லுங்க உடனே வந்துர்றேன்.
பஸ்டாண்டில் பஸ் வந்து நின்றது.
சரிம்மா…அப்ப… பாப்போம் போய்வர்றீகளா…காஞ்சனா சகுந்தலாக்கு விடை கொடுத்தாள்.
நீங்க…
மருமகன் இங்கயே நிக்க சொல்லிருக்கார்.
அப்ப சரிம்மா …நான் வர்றேன். ஏம்பிள்ளைதான் மணிக்கூண்டுக்கிட்ட வைட் பண்ண சொல்லிருக்கான். ஏப்ப வர்றானோ… முனகிக் கொண்டே நடையைக் கட்டினாள்.
மணிக்கூண்டுஅருகில் நின்று கொண்டு காஞ்சனாவையே பார்த்துக்கொண்டிருந்தாள். பாவம் தெரியாத ஊருல வந்து இந்த அம்மா தனியா நின்னுக்கிட்டு இருக்கு . மருமகன் எப்ப வர்றானோ.
சிறிது நேரத்தில் காஞ்சனாவின் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது.
பரவாயில்லை…இந்தம்மா யோகக்காரிதான் சொன்ன மாதிரி மருமகன் உடனே வந்துட்டான்.சகுந்தலா மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
ஆட்டொவிலிருந்து இறங்கி காஞ்சனாவின் பையை வாங்கி ஆட்டோவில் வைத்து சற்று திரும்பினான்.
அட…நம்ம பய மாதிரி இருக்கு …அவளா இவ…
டேய்…டேய்…கதிரேசா…அய்யோ அவனைக் கூப்பிடுங்களேன். கூட்டத்தை பார்த்து கை காட்டினாள். டேய் கதிரேசா…கதிரேசா…கத்திக் கொண்டே ஓடினாள்.
ஆட்டோ சட்டென்று வேகமெடுத்தது…பின் மறைந்தது.
ஒரு மணி நேரம் …ரெண்டு மணி நேரம்…காலம் கடகடவென்று ஓடியது. கதிரேசனிடமிருந்து எந்த சலனமுமில்லை.
ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை போன் செய்தாள். அவன் போனை எடுக்கவில்லை.
அடப்பாவி…நீயெல்லாம் ஒரு பிள்ளையா! பெத்த அம்மாவை கண்கலங்கவிடுறவன் எப்படி பொண்டாட்டியை வச்சு காலம் தள்ளப் போறே…கண்களில் கண்ணீர் கடலாய் நிற்க, தனது பையை தூக்கிக்கொண்டு வந்த பஸ்ஸிலேயே மீண்டும்காலடி எடுத்து வைத்தாள் சகுந்தலா.
இதையும் படிக்கவும்....
பெற்ற மனம்…