Thursday 26 June 2008

எல்லாம் எதற்காக…

வானத்தின் உச்சியிலே வர்ணஜாலம்
வண்ண வண்ண மேகத்தினால் வர்ணக்கோலம்
பாணத்தை விட்டது போல் எரி நட்சத்திரம்
பறந்து வந்து விழுகிறதே பூமி மேலே
கானத்தை இசைக்கின்றார் யாரோ அங்கு
காற்றாக நம் உடலில் இனிமை கூட்டும்
தானத்தை தகுதியாக தரம் பிரித்து
தவளவிட்டார் பூமி மேலே உயிர்களாக
ஊனத்தை உயிரினத்தில் படைத்துவிட்டு
உருப்படியாய் வாழவழி காட்டிவிட்டார்
மானத்தை மறைக்க நல்ல ஆடைகளும்
மனிதனுக்கு வேண்டுமென்று தோன்றச் செய்தார்
கோடையிடி கொடி மின்னல் குமுறலாக
கொட்டும் மழை காற்றும் மிக வேகமாக
வாடையடியென்று சொல்லி ஆடும் தேகம்
வாய் பேசா ஊமையாக அழுகும் மேகம்
கண்ணீராய் சிந்துகின்றாள் மேகம் இன்று
தண்ணீராய் தாகம் தீர்க்கும் ஆறாய் சென்று.

0 comments: